Thursday, October 5, 2023

Madhyamar-சிட்டுக்குருவி_தினம்

 #சிட்டுக்குருவி_தினம் 19-03-22



குட்டியூண்டு பறவைக்கு

பட்டித் தொட்டியெல்லாம் கொண்டாட்டம்..

சர்வதேச தினமென்று..

சவக்குழியில் தள்ளி விட்டபின்

பாவ மன்னிப்பு கேட்கும் தினமோ..


சின்னதொரு sparrow வையும்

Spare செய்யாத. 

சகட்டு மேனி வளர்ச்சியோ..?

சந்ததியின் வீழ்ச்சியோ..?


வீட்டுக்குள்ளே கூடு கட்டி..நீ

கூடி வாழ்ந்ததொரு காலம்..

குளிர் பெட்டி வந்ததும்..

குட்டிக் குருவி காணலையே..


தோட்டத்து செடியிடையே..உன்

கொடியிடை அசைத்து..

நடை போட்ட அழகென்ன?


பறந்து போன மாயமென்ன?

பூச்சிக் கொல்லி யின் நெடியாலோ?


நாடார் கடை வாசலில்..

நடை போட்ட அழகென்ன?

சிதறிக் கிடந்த தானியங்கள்..உன்

சின்ன வாய்க்குள் போனதென்ன?..

பல்பொருள் அங்காடி வந்ததுமே..

பசியால் தவித்து அழுதாயோ?


மின்கம்ப வரிசையிலே

 மிரளாமல் அமர்ந்ததென்ன?

முக்கிய கூட்டம் நடத்தும் அழகென்ன?

மடியும் வரை மகிழ்ச்சி அளிப்போமென்று..

மாநாட்டில் தீர்மானம் எடுத்தீரோ?


தேங்கும் தண்ணீரில் உன்

ஆட்டம் கண்டேன்...நீ

கோதிக் கொள்ளும் அழகை ரசித்தேன்..அதிலிருந்து

சிதறும் நீர்த்துளியில்..

நானும் நனைந்தேன்..


மனிதனோடு வாழ்வதிலே..

மகிழ்ச்சி உனக்கு..ஏனோ

மனிதம் மறைந்தது?..உன் 

மனமும் ஒடிந்ததோ?


நாகரீக வளர்ச்சியிலே..

நாசமாகிப் போன வர்க்கம் நாங்கள்..


நச்சென்று அறிந்த பின்னும்

நட்டோமே..நாடு முழுதும்..

நாளும் பேச உதவும்..

அலைபேசி டவர்களையே..


காந்தமாய் எமை இழுத்த

சின்னத் 👼 தேவதையே..மின்

காந்த அலைக்கு 

பயந்து நீ ஓடினாயோ?

லேகியத்துக்கு உன் பேர் சூட்டி

லாபம் பார்க்கும் உலகத்திலே

பாவம் பிழைத்து போவென்றே..

பறந்தேதான் மறைந்தாயோ?


மறைந்து போன உன்னையுமே

மறக்கத்தான் முடியலையே..

செயற்கை கூடு வாங்கி வந்து

சத்தமிடும் குருவி பொம்மை வைத்து..

சந்ததிக்கு காட்டுகிறேன்..

சொல்லிக் கொடுக்கிறேன்..


"வழியொன்று கிட்டி..உன் 

வாசலுக்கு ஒருநாள் வந்தால்..சிறு

வீடு ஒன்று அது கட்ட..

சின்னதாக ஒரு இடம் தா என்று.."


ஏ குருவி..சிட்டுக்குருவி..

உன் சோடி எங்க அதை கூட்டிக்கிட்டு..

என் வீட்டுக்குள்ள வந்து கூடுகட்டுனு..


வரவேற்பு மடல் வாசிப்போம்..

வண்ணக் கோலமிட்டு வரவேற்போம்..

No comments: