Thursday, January 25, 2018

போளியா ...போதி மரமா.!!!

14-01-18

போளியா ...போதி மரமா.!!!

போகிப் பண்டிகை என்றாலே
போளியில்லாமல் உண்டோனு
புதுக்கோட்டை ராசா..(அட..என் அப்பாதான்)
போட்டாரே ஒரு போடு..
என்னடா இது..இந்த
அகிலாவுக்கு வந்த சோதனைனு..
அரண்டு போய் ஆரம்பிச்சேன்..
ஆண்டவனை வேண்டினேன்.

இளகலான மாவு..கொஞ்சம்
இறுகலான பூரணம்..
உள்ளங்கை மட்டுமே..
உற்ற துணை யிங்கே..
பதினொன்றே போதுமென்று
பாகம் பிரித்து உருண்டைகள்
எண்ணெயில் தோய்ந்த மைதா..
என்ன பாடு படுத்துதப்பா..
ஓட்டம் பிடிக்குதப்பா..
ஓட்டையும் விழுந்ததப்பா..
இரண்டாவது உருட்டி தட்ட
இரண்டாய் கிழிந்ததப்பா..
மூன்றாவது போளியோ..
மெத்தென்று இல்லாமல்
முறுகலாச்சு ஓரத்தில்..
நாலாவதோ ..
நான் வரலை விளையாட்டுக்கென
நடுங்கி ஒளிஞ்சதப்பா
அஞ்சாவது உருண்டையோ..
அஞ்சாதே என்னைக் கண்டு
அழகாய் உருட்டி..
அடைப்பாய் பூரணம்..
அமுதமாய் இனிப்பேன்
அனைவருக்கும் படைப்பாயென
ஆசியும் வழங்க..
அப்புற மென்ன..
ஆறு ..ஏழு..எட்டு.
அருமையாய் அடுக்கினேன்..
ஒன்பது..பத்து ..பதினொன்று...
ஒரு நொடியில் முடிக்க..

கை வண்ணம் காட்ட நினைக்கையில்
கைக்கொட்டி சிரித்தது காலியான பாத்திரம்.
போளி சொல்லும் பாடமாக
போதி மர ஞானியானேன்.

பாதி வாழ்க்கை போனபின்னே
பாதை தெரிய ஆரம்பிக்கும்..
பார்த்துடலாம் வாழ்ந்தென்று
பறக்க நினைக்கையிலே
படக்கென முடிந்துவிடும்..

பிறந்ததுமே கற்றறிய
பள்ளிக் கூடமிங்கேது
படபடப்பாய் கடக்கையிலே
பாடமாகும் வாழ்க்கையிங்கே..

படைத்தவன் தந்தான்..இந்தப்
பாத்திரம் (வாழ்க்கை)நாடகத்தில்
படைப்போமே சரித்திரம்..
போளி தந்த போதனை..
போலியில்லை..உண்மை..உண்மை.
























No comments: