Wednesday, September 9, 2015

எப்போ வரும் என் முறை..!!!!


எப்போ வரும் என் முறை..!!!!

 

இந்தியக் குடிமகன் நானென்றே

இறுமாப்புட னிங்கு சொல்லிடவே

காகித மொன்று வேண்டுமடா

ஆதார அட்டையென்றே அழைப்பாரடா..

 

அரசிட்ட ஆணைக் கிணங்கி

ஆவணங்கள் அடுக்கிச் சென்று

அரசு அலுவலக வாயிலினே

ஆவலாய்க் காத்துக் கிடந்தேன்

அடியேன் முறையுன் தான்

அடுத்தாவது வருமோ என்றே..

 

அசதியுடன் ஒர் கூட்டம்

அடங்காமல் நின்ற நேரம்

அங்கேயும்  வந்தாரே  அழகாய்

காவியங்கி கட்டைச் செருப்பொடு

சேவித்த கரங் கொண்டு

செக்கச் சிவந்த சாமியாரும்..

 

 கால்கடுக்க நின்ற கூட்டமதை

கடுகளவும் மதிக்க வில்லை

கடவுளைக் கண்டது போல்

கைக்கூப்பி காலில் விழுந்து

கடுகடு கண்காணிப் பதிகாரியும்

காவலாய் கூட செல்ல

கச்சிதமாய் நடந்ததுவே வேலை

கை நொடிக்கும் வேளையிலே.

 

கடைசியாய் வந்த அவருக்கோ

கும்பத்துடன் பூரண வரவேற்பு

குடிமகன் நானுந்தானே

குழப்பமாய் இருக்குதடா..

 

காவியுடை யொன்று போதுமா

காரியங்கள் கை கூடிடவே

கேலியாய் சொல்ல வில்லை

வலியில் இங்கே விளம்புகிறேன்

வரிசையில் காத்தி ருக்கேனே

வருமெப்போ என் முறையென்று…!!!..

 

 

 

 

Thursday, April 23, 2015

மேகத்தின் தாகம்




மேகத்தின் தாகம்

எத்தனை அழகு இந்த பூமி
எட்டி மேலிருந்து பார்க்கையிலே
ஏக்க மொன்று தோன்றுதே
எப்பொ கீழே போவொமென்றே

வானை எட்டும் தென்னையும்
வளைந்து ஓடும் ஆறுகளும்
வண்ணஞ் சிந்தும் வனங்களும்
வாசந் தரும் பூக்களும்

துள்ளி யோடும் மான்களும்
தாவித் திரியும் வண்டுகளும்
துவண்டே போகா கடலலையும்
தரையில் விரிந்த பசும்புல்லும்

தள்ளி நின்று பார்க்கையிலே
தவிப்பு மாகுதே மனமிங்கே
எட்டா உயரத்தில் நானிங்கே
தொட்டுப் பார்க்க ஏங்குவனே

அதனால் தானோ அலைகின்றேன்
அடைமழையாய்க் கண்ணீர் சிந்துகிறேன்
ஆண்டவன் அவனை வேண்டுவேனே
அடுத்த பிறவி உண்டு எனில்
மண்ணில் மைந்தனாய்ப் பிறப்பதற்கே
அதுவரை கொஞ்சம் பொறுத்திடுங்க
அன்னை இயற்கையை காத்திடுங்க..
அன்பாய் ஒரு வேண்டுகோளும்
அவனி மாந்தர்க்கு விடுப்பேனே..


Monday, April 13, 2015

கவிதை எனக்கு …..??????????????????

கவிதை எனக்கு …..??????????????????

கவிதை எனக்கு..என்ன வென்று
கணக்காய் தெரியா தெனக்கிங்கு....

கவிதை எனக்கு சுகமா?-
இதமே என்றும் தருவதனால்..

கவிதை எனக்கு சவாலா?
களமின்றி ஓர் யுத்தம் நடப்பதனால்

கவிதை எனக்கு தோழனா?
கைக் கோர்த்து  என்னோடு  நடப்பதனால்

கவிதை எனக்கு துணையா?
தனிமையில் தோளும் கொடுப்பதனால்..

கவிதை எனக்கு காதலா?
தன்னிச்சையாய் வந்து  ஒட்டியதால்.

கவிதை எனக்கு ஆறுதலா?
இறகாய் என்னை வருடுவதால்...

கவிதை எனக்கு தத்துவமா?
பிதற்றலாய்  என்றும் இருப்பதனால்..

கவிதை எனக்கு கனவா?
கைக்கு எட்டாமலே போய்விடுவதனால்.

உறவென்று  சொல்லி  உருகலையே
வரமென்று  சொல்லி வாட்டலையே
எனக்குள்ளே  இருக்கும்  ஒளியை
என்ன  உறவென்றே  அழைப்பேன்….?

அழகோ அழுகையோ
அருமையோ பெருமையோ
சோகமோ  கோபமோ
நிழலாய்  தொடரும்
 நினைவாய்        இனிக்கும்
சுகமது பலதரும்
 உள்ளத்தின் உள்ளிருந்து
உணர்வினிலே கலந்திங்கே
ஒன்றாய் என்னுள்ளே
ஒற்றிப் பிணைந்த உனை
உறவென்ன சொல்லி அழைப்பேன்?


விருத்தமுண்டு.. வெண்பா வுண்டு
வித விதமாய்  இலக்கண முண்டு
வித்தை  எனக்கு  எப்போ  வரும்..
வருத்த மொன்று என்று முண்டு


மருந்தளவும் அறியெனே
மரபு என்ன வென்று-
மறந்தும் எழுதலையே
முறையாய் ஒரு நற்கவிதை


எனக்கு நீ என்னவென்று
எண்ணி எண்ணி வியக்கிறேன்

.
வட்டத்துக்குள்  சிக்காத வண்ணக்கிளி
வாட்டம் போக்கும் சொந்தக் கிளி-
விட்டுப் போகாதே என்னை
வேண்டுதலும் இதுதானே..


Sunday, March 29, 2015

தங்கமணி…

வித்தை உன்னுள் உள்ளதென்று
அத்தையவள் சொன்ன வேளை
சித்தம் சிதறியதோ என்றே
சத்தம் மிட்டு சிரித்தேனே

சிந்தையினை சீராய் செலுத்து
விந்தை பல காண்பாய் என்றே
விதை ஒன்றை விதைத்தாளே
கவிதைக் கனலதை மூட்டினாளே

படைத்தவனுக்குத் தானா பாசுரங்கள்…?
அடைபட்ட  அடையாள மொன்றை
தடை யுடைத்து வெளிக் கொணர்ந்த
தாயுமான தங்கமணிக்கு தலைவணக்கம்.


Tuesday, March 24, 2015

முருகனை நினை மனமே



பச்சை மயில் வாகனனே
பழனி மலை பாலகனே
பிச்சை ஏந்தும் பக்தர்தம்
இச்சை ஈந்து அருள்பவனே..

பாகமது கிட்டா வேளை
கோபமது கோட்டைத் தாண்ட
கோபுரம் ஏறி நின்றாய்
கோதண்ட பாணி ஆனாய்.

சித்தராம் போகர் அன்று
செதுக்கிய சிற்பம் நீயே
சக்திகிரி மலை நின்று
பக்தர் பாவம் தீர்ப்பவனே..

முத்துக் குமரன் நீ
மூவுலகும் ஆள்பவன் நீ
சங்கத் தலைவன் நீ
தங்க வடிவேலன் நீ.

அழகன் உனை வேண்ட
ஆறாய் மக்கள் பெருக்கிங்கே
அருமுகன் அருள் பார்வை
ஆற்றுமே தீரா நோயும்.

சுமந்து வந்த காவடிகள்
சுகம் பெறவும் செய்யுமே
சுருட்டி இழுத்த தங்கத்தேரும்
சூழும் வினை தீர்க்குமே..

குலதெய்வம் உனை வேண்ட
குடும்பம் சூழ வந்தேனே
குறை எல்லாம் தீர்த்தெங்கள்
குடி விளங்கச் செய்வாயே.

திரு ஆவினன்குடிப் பெம்மான்
திரு அருள் புரிவாயே
திரு நீறு அணீந்தோமே
வருந் துயர் காப்பாயே

மருந்தாம் உன் மந்திரமே
தருவாய் தயை புரிவாய்
தரிசனம் தந்து நீயும்
கரிசனம் காட்டு கந்தா..
(தரு-மரம்)



Thursday, March 19, 2015

தங்கமணி …. எங்கே நீ?



தங்கமணி ….
எங்கே நீ?
ஓராண்டு ஓடியதே
ஒருநொடியும் போலத்தான்…

தாயும் தந்ததையும்தான்
தேடித்தான் வைத்தனரோ
தன்னிச்சையாய் இட்டாரோ
தங்கமணி உன் பெயரை

இடியாய் இடைஞ்சல்கள்
கடுமையான காலகட்டம்
கடுஞ்சொல் ஒன்றுகூட
கண்டதில்லை உன் நாவும்.

காலம் மாறியது
கவிதாயினி ஆனாய் நீ
கணினி யுலகினிலே
கொடிகட்டிப் பறந்தாயே

கயிலாயவன் கருணை
கவிதையிலே கண்டாயே
மையல் கொண்டாயே
பைந்தமிழின் பண்மீது

வலைவழிப் பாடம்
சளைக்காமல் கற்றாயே
தலையிலே கங்கைகொண்டான்
கலை நயமாய் உன்கவிதையிலே

சொந்தமது கூடியது
சந்தவசந்த பிணைப்பாலே
மந்தமான வாழ்க்கையுமே
பிந்தித்தான் ஓடியதே


பிறை சூடும் பெம்மானை
சிறை இட்டாய் உன்பாட்டில்
பிரதோஷ நாளினிலே
பரமனுனை அழைத்தானே

காரைக்கால் அம்மைஎன்று
கற்றறிந்தோர் புகழ்ந்தாரே
மற்றுமொரு பிறவி எடு
மீதமுள்ள கவிபாட

கண்ணின் மணி போல
காத்தாயே எம்மையுந்தான்
காணாமல் போனாயே
தங்கமணி.. எங்கே நீ


Monday, March 16, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு- 4


கணக்குப் பரீட்ச்சையின்று
கலங்காதே கண்ணே நீ

தலையணையாய்ப் புத்தகங்கள்
தலைசுத்தும் கணக்குகளும்
பிழையின்றி செய்திடவே
பிள்ளையாரை வேண்டுவனே..

வரைபடமும் வடிவியலும்
வளைகோடும் நேர்கோடும்
வளையாது வரைந்திடவே
வேலவனே அருள்வாயே..

மனப்பாடம் செஞ்சுவைத்த
கன அடியும் பரப்பளவும்
நினைவினிலே வந்திடவே
வாணியுனை வேண்டுவனே

பிணக்கிங்கே கணக்கென்ற
மனக்கணக்கை மாற்றியிங்கே
மனதுவைத்து படித்தாலே

மாமலையும் ஓர்கடுகாம்..

Friday, March 13, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு -3




இரண்டாம் மொழியாம்

இந்திப் பரீட்சையின்று..

இலக்கணமும் இலக்கியமும்

இயல்பாக அழகாக…..

ஈரடிச் செய்யுளிங்கே

ஈர்க்குதே காந்தமென…

தாகூரின் தங்கவரிகள்

தலைநிமிரச் செய்திடுதே

கபீரிவரின் கவிதைகளோ

களிப்பின்பம் ஊட்டிடுதே..

வாழ்க்கை வரலாறுகளோ

வாழும்நெறி சொல்லிடுதே


படைப்பாற்றல் சோதிக்க

பாகமொன்று உண்டுங்க 

கட்டுக்கதை எழுதாமல்

கட்டுரையை எழுதிடுங்க..

பிட்டுபிட்டு வையுங்களேன்

புரட்சியான சிந்தனையை

எட்டிக்காய் இல்லங்க 

எகிறியுமே  ஓடாதீ ங்க  

கிட்டுமுங்க  மதிப்பெண்ணும்

நாட்டமுடன் படித்தாலே..

இந்தியென்ன தமிழென்ன

இன்பமுடன் படியுங்க.

இந்தியாவின் குடிமகனாய்

இறுமாந்து நில்லுங்க....

Tuesday, March 10, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு -2


 

இரண்டாவது பரீட்சை இன்று

இரண்டானது வீடு இங்கு

 

வரலாறும் பூகோளமும்

வகைவகையாய்  வரைபடமும்

குடியியலும் பொருளியலும்

குவிந்தனவே பாடங்களாய்..

 

ஆழமாய் அணுகினாலே

ஆர்வந்தான் பொங்கிடுமே

அழகான அவணிதனை

ஆராதிக்கத் தோன்றிடுமே…

 

ஆடுபோல   மேய்ந்தபடி

ஆசையொன்று இல்லாமல்

அங்குமிங்கும் படித்ததனால்

அல்லல்தான்  மிச்சமிங்கே..

 

சமூகவியல் பாடமிதை-

சங்கடமாய் நினையாமல்-வரும்

சந்ததிகள் உணர்ந்தாலே

சமூகமிங்கே உயருமன்றோ?