Wednesday, September 28, 2016

ஒரு நாள் ராஜாங்கம்

வத்தல் குழம்பு
வடாம் பொரிச்சது..
வடுமாங்காயோடு..
வெண்ணையாய் பிசைந்த...
வாழையிலையில் கட்டிய..
தயிர் சாதம்..
வாய் முழுதும் பல்லாக(செட்டாக)
வழியனுப்புவாள் என் பாட்டி..
தாத்தாவை ஊருக்கு..

நாலுமணி பஸ்ஸில் போனாதான்..
நாலு வேலையும்..நடக்குமென்றே..
கட்டு சாத மூட்டையோடு..
கிளம்பிடுவார் என் தாத்தா..

ஆல் இந்தியா ரேடியோவின்..
அலறல் இன்றில்லை..
வந்தே மாதரம் வரும்போது..
வரிசையாய் உருவப்படும்
விரிப்பும் தலையணையும்..
கட்டாந்தரையிலே..
தவக்களை படுக்கையில்லை
தப்பிச்சோம் இன்னிக்குனு..
தாராளத் தூக்கம்..
விவித் பாரதி..
வீச்சென்று அலறும்..

எட்டு மணி யாச்சு..
எங்கே இரண்டாவது காப்பி..
பத்து மணியாச்சு..
பெருக்கித் தொடக்கலையா..
பூஜைக்கு நாழியாச்சு..
பதினொன்றறை யாச்சு..
பசி உயிர் போறது..
பன்னெண்டு மணியாச்சு..
பாங்க் வேலை முடிக்கணும்
ரெண்டு மணியாச்சு..
ரெடியா..காப்பி..
நாலு மணியாச்சு..
நல்ல சூடா டிபன்..
செல்வராஜ் செய்தி வாசிப்பு..
செவக்காமல் சுட்ட அப்பளம்..
ஒன்பது மணியாச்சு..
ஒரு மோர் சாதம் போதும்..
கடிகாரம் பார்த்து.
காரியம் இன்றில்லை..
வாடகை நூல் நிலயம்..
வாசலில் விழும் புத்தகம்..
வாரி எடுத்து..
வரி விடாமல் படிக்க..
வசதியான நாளிது..
வெளியே போனவர்..
வீட்டுக்கு வரும்வரை..
விலங்குகளில்லா..
விரும்பும் வாழ்க்கை..
வாசலில் காத்திருப்பு..
வர கொஞ்சம் நேரமானால்...

நாள் முழுதும் சுத்திய களைப்பில்
நாய் முகம் காட்ட..
நான் இல்லனா..
நிம்மதியா இருந்திருப்பியே..
பதிலே பேசாமல்..
பறிமாறுவாள் பாட்டி..
பழகிய வசவுகள்..
புதுசா என்ன வலி?

No comments: