Friday, June 2, 2017

எழுதுகிறேன் ஒரு கடிதம்

அன்புள்ள பவித்ரா அக்காவுக்கு
ஷேமம்.ஷேமத்திற்கு பதில். அம்மா என் பக்கத்திலே உட்கார்ந்து சொல்ல சொல்ல எழுதறேன்.அங்கு உன்னோட ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி இருக்கு? நீ கிளம்பினதும் வீடே வெறிச்சுனு போச்சு. குழந்தை ராத்திரி பூரா அழுதா..உன்னைத் தேடிண்டே இருந்தா. இப்பொ நாலு நாளா அழுகை கொஞ்சம் குறைஞ்சுருக்கு. அம்மாவோடயும் என்னோடயும்  பழகிட்டா. பவுடர் பால் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறா. உன்னை பத்தி தான் நினைப்பு அம்மாக்கு எப்போதும்.
உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ. பளுவான வேலையெல்லாம் செய்யாம இருக்கச் சொன்னா..இன்னும் நீ பச்சை உடம்புக்காரிதான். இப்போ சரியா கவனிச்சுக்கலைனா பின்னாடி ரொம்பா வீக்காகிடுவேனு அம்மாக்கு கவலை.
அப்பா வார்த்தை க்கு வார்த்தை உன்னையே சொல்லிண்டு இருக்கா. குழந்தையப் பத்தி கவலைப் படாதே..இப்போ கூட இங்கேதான் என் மடியில் படுத்துண்டு தூங்கறா. உன் உடம்பைப் பார்த்துக்கோ.அத்திம்பேரைக் கேட்டதா சொல்லு.அடுத்த லீவு உனக்கு எப்போ?
அம்மா இப்போ எழுந்து போயாச்சு.
அக்கா..உனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.அடுத்த வாரம் புதன்கிழமை க்குள்ள ஃபீஸ் கட்டணும்.இல்லனா பரீட்சை எழுத விடமாட்டா. இந்த லெட்டரை தந்தி போல பாவித்து மணியார்டர் அனுப்பிடுக்கா..போன வருஷத்துக்கு முந்தின வருஷம் வாங்கின இங்க் பேனா.ரொம்ப இங்க் கொட்டறது. அதுக்கும் சேர்த்து ஒரு அஞ்சு ரூபா அனுப்ப முடியுமாக்கா..
இங்கே எல்லாரும் செளக்கியம். குழந்தை சமத்தா இருக்கே. கவலைப்படாதே.
இப்படிக்கு
அன்புத் தங்கை
சந்திரா

No comments: