Tuesday, May 8, 2018

ஓ..பாப்பா..லாலி.( மத்யமர்)

ஓ..பாப்பா..லாலி..

ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்குப் போனேன் சாயந்திரம். ஆபீஸிலிருந்து வந்தவள் ரொம்ப சோகமாக உட்கார்ந்திருக்க, அவள் மூணு வயது பைய்யன் அடங்காமல் அழுது கொண்டிருந்தான்.
கண்ணா..ஏன் செல்லம் அழறேனு கேட்டேன். அதுக்கு துடுக்குனு ஒரு பதில்..'aunty..டாட்டா.aunty ..டாட்டா' என்றான்.
என்ன நடக்கறது இங்கேனு அவளை விசாரிக்க..அழுதுவிடும் நிலையில் என் தோழி..' நான் ஆபீஸ் போறதால ஒரு baby sitter இவனை பார்த்துக்க வருகிறாள். வீட்டில் மாமியார் இருந்தாலும் வயசானவர். அவரால் இவன் பின்னாடி ஓட முடியலை. ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அன்பா இவனை கவனிக்கிறாள். ரொம்ப ஒட்டிக் கொண்டு விட்டான். அதனால் தினமும் அவள் சாயங்காலம் கிளம்பிப் போனதும் இப்படித்தான் அழுகை என்று அவளும் விசும்பினாள். என் கிட்ட கொஞ்ச நேரம் வரவே மாட்டான். அவன் சமாதானமாகும் போது தூங்கி விடுகிறான்.இப்படியே போனால் என்னையே யார்னு கேட்பானோனு பயமாயிருக்கு என்றாள் நியாயமான கவலையில்.

வேலை ..விட முடியாது..
ஆளை..விட முடியாது..
வேறு வழி?

இப்போது இதெல்லாம் ரொம்ப சகஜமாகி விட்ட போதிலும் ஏனோ மனது பாரமானது.

எப்போதோ எழுதியது மீண்டும் நினைவுக்கு வந்தது.

ஓ..பாப்பா..லாலி..

ஆயா(aunty) வந்ததும் தான்
அம்மாவுக்கு உயிரே வரும்
அவசர ஆணைகள் பிறப்பித்தே
அவளும் ஒப்படைப்பாள்..தன்
அன்புச் செல்லத்தை..
அலுவலகம் ஓடியபடி..

ஆயாம்மா..
பாலும் சோறும் தருவாள்
பாதி அவளும் தின்பாள்.
(தெம்பு வேணுமே)

பாப்பாவுக்கு பிடித்த தெல்லாம்
ஆயாவுக்கு ரொம்ப அத்துப்படி

'கவனிப்பாள்' தன் குழந்தைபோல
'கவனிப்பாள்' எசமானியு மென்றே
ஆட்டுவாள் தலை எப்போதும்
ஆட்டுவிக்கும் பாப்பாவின் பொம்மையாய்
பொழுதைக் கழிக்கும் வித்தையில்
பல்கலைக் கழக பட்டதாரியிவள்.

முள்ளும் ஆறைத் தாண்ட
முள் மேல் இருப்பாளே
மூச்சும் வந்திடுமே..எசமானி
முகம் கண்டேதுமே..

பையை எடுத்து புறப்பட்டு
'பை''பை' சொல்ல..அவள்
புடவைத் தலைப்பை இழுத்து
போகாதே..நானும் வரேன்னு
பிடிவாத அழுகையில்
படுத்துமே பாப்பாவும்..

பயமும் பிடித்ததே..
பதிக்கணுமே  மனதிலே
பாப்பாவின் அம்மா..
படுபாவி நானென்று.

அரை நேர அம்மாக்களாக
ஆயாக்கள் ஆனபிறகு..
அக்குழந்தைக்கு தெரிவதில்லை..
ஆறு வித்தியாசங்கள்..
ஆயாவுக்கும் அம்மாவுக்கும்..

No comments: