Thursday, November 1, 2018

மழைக்காலம் மேகம் ஒன்று..

மழைக்காலம் மேகம் ஒன்று..

'பொத்துக் கிட்டு ஊத்துமடி வானம்...
சொட்டு கூட புலம்பலில்லா காலம்.'

அப்போ எல்லாம்  வீட்டு ரமணன்கள் அப்பாக்கள் தான்.. பேப்பரை மேஞ்சு மேஞ்சு படிப்பு.. அதில் weather forecast வரும். map ல கூப்பிட்டு காண்பிப்பார்கள்..கிழக்கிலிருந்து மேகம் தெற்கு நோக்கி வரது பாரு.  ஒரு சுழல் மாதிரி தெரியறதா..அது அப்படியே நகரும்னு கிளாஸ் எடுக்கப்படும்.  நம்ம வீட்டு வாசலில் நாளை மழை பெய்யும் கண்டிப்பா அடித்து சொல்வர். google map, google earth எல்லாம் குடும்பத் ்தலைவர்களே..
கண் விழிச்சதும் வாசலில் வந்து கை நீட்டிப் பார்க்கப்படும்..
அடுத்த நடவடிக்கை. raincoat..
 தங்கத்தில குடை ஜிமிக்கி போட்டு அனுப்புவா ஸ்கூலுக்கு...சத்தியமா குடை மட்டும் தரமாட்டார்கள்.
தொலைச்சுட்டு வந்து நிப்பேனு வசவு விழும். கலர் குடை கொண்டு வரும் ஃப்ரண்டை பார்த்தா ஒரு காண்டாகும்.
பீரோலேர்ந்து பாண்ட்ஸ் பவுடர் போட்டுண்ட பஞ்சு மிட்டாய் ரெயின் கோட் எடுத்து தரப்படும்..கவரோட பத்திரமா கொண்டுவானு கட்டளையுடன்.லேசா தூறல் போட ரெயின் கோட்டின் பவுடரும் கரைந்து ஒடும்.. ஹவாய் செருப்பு கரும்புள்ளி செம்புள்ளி அடிக்கும். அந்த பிளாஸ்டிக் ஒரு 'க'ப்படிக்க..மழையின் ஜில் காற்றை அனுபவிக்க முடியாதபடி் புழுங்கித் தள்ளும். தெரு முனை தாண்டியதும்...ரெயின்கோட் பைக்குள் போகும்..ஆனந்த கூத்தாட்டம் கொட்டும் மழையிலே..
அடுத்த குஷி..மாநிலச் செய்தியில் லீவ் சொல்லிடுவார் செல்வராஜ். லேசா தூற ஆரம்பிச்சதும் கரண்ட் கட் ஆகிடும். inverter இல்லாத இன்பமான காலம்..no படிப்பு.no home work..எல்லார் வீட்டு வாசலிலும் குட்டி குட்டி மாநாடு நடக்கும்..குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..ராம ராம ராம சொல்லுங்கோ கரண்ட் வரும்னு வயசான பாட்டி சொல்ல..வரக்கூடாது லைட்டுனு வேண்டியபடி ராம மந்திரம் தெருவில் ஒலிக்கும்..
பளபளனு துடைச்சு வெச்ச லாந்தர் விளக்குகள் மின்மினிப் பூச்சி மாதிரி அழகா எரியும்.அம்மாக்கள் சூடா சாதம் வெச்சு, காலையில் செய்த ரசத்தில் மிளகும் பெருங்காயமும்,
கருவேப்பிலையும் போட்டு கொதிக்கவிடும் வாசம் ஊரைத் தூக்கும்.பசியைக் கிளறும்..மெழுகு வர்த்தியும் அங்கங்கு எரிய.. ஆவி பறக்கும் சாப்பாடு அரை நொடியில் காலியாகும்.சாப்பிட்டு முடித்து இருட்டில் இன்னோரு ரவுண்டு anthakshari  நடக்கும்.
புயல் பற்றி பெரியவர்கள் பேச..பொழுது நாளைக்கு எப்படி கழிக்கலாம்னு வாண்டூஸ் ப்ளான் நடக்கும்.
ஒருவழியாக அவரவர் வீட்டுக்குள் தஞ்சம் அடைய..
நானும் அப்பாவும் காற்றில் ஆடும் மரத்தையும், கருமை கட்டிய வானத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்க...சரக் சரக் என்று சிலரின்  செருப்பு சத்தம் மட்டும் கேட்க..
மழை நாட்கள்..மனசுக்கு பிடித்த நாட்களாய் இருந்ததை..இன்னும் மனசு நினைத்து ஏங்குவது ஏனோ?

No comments: