Tuesday, April 13, 2021

பழி ஒரு இடம்...

 பழி ஒரு இடம்...


அணைந்து போன கைப்பேசி

அடிக்க மறந்த அலாரம்..

அதிகாலை நேரத் துவக்கம்

அரக்கப் பரக்க அவசரம்


காலியாய்த் தொங்கும் பால்பை

காலையில் வராத செய்தித்தாள்

கழுத்தை அறுக்கும் மின்வெட்டு

கிண்டிப் போன தோசை


கையில் கிட்டா காலுறை

காணாமல் போன ஐடி கார்ட்

கசங்கி கிடந்த பள்ளிச்சீருடை

காக்க மறுத்த ஆட்டோக்காரன்


மூடியைத் தேடிய பாட்டில்கள்

முடியல உடம்புக்கென்று

மூணு நாள் விடுப்பில் 

மூச்சிலும் மேலான முனியம்மா..


ஒண்ணுமே சரியா இல்லை

ஒரு வேலையும் நடக்கலையே


ஓடிய சிந்தனை கலைந்தது

'ஒன்னோட பொட்டு 

ஒருபக்கமா இருக்கேனு'

ஓடி வந்து ஆசையுடன்

ஒட்டிக் கொண்ட பெண்ணை

ஓங்கி விட்டாள் ஓர் அறை..


ஓவெனெ அழது புரண்டது

ஒண்ணும் புரியாத குழந்தை


சமாதானம் செல்லுபடியாகாதே

சாட்சியம் இருக்கே

சாத்திய அடியின் சுவடுகள்

சிவந்த அவளின் கன்னத்திலே


...

No comments: