Monday, April 26, 2021

வாண்டு கூட்டமே

 ஒரு வாண்டுக் கூட்டமே...

(ராஜா சார் பாடல் வரி)..


வெறிச்சோடிய வராண்டாக்கள்

விழாக்கோலத்தில் இப்போ

விடுமுறை விட்டாச்சே..ஒரு

வழி பண்ணிடும் வாண்டுகள்.


பூங்காக்களில் பூத்தது

புத்தம்புது மழலைப் பூக்கள்.


ஓடிப் பிடித்து விளையாடி

ஒரு சிறு சிராய்ப்புக்காக

ஓவெனெ அழுது

ஊரைக் கூட்டிய குட்டீஸ்.


'பால்' பொறுக்கிப் போட்டா

'பாட்டிங்' உண்டு நாளையென

ஒட ஒட விரட்டிய

புதுசா மீசை முளைத்த

பந்தா பார்ட்டிகள்.


மாடிப்படி ஏறுகையில்

மறைஞ்சிருக்கேன் நானிங்கே

மாட்டி விட்டுடாதீங்கனு

மன்றாடிய மழலைகள்.


பாவனையாய் பெரியவன்

பின்னால் அமர 

பறக்குது தன் சைக்கிளென்று

பரவசத்தில் தம்பிகள்.


கதவைத் தட்டி விட்டு

காணாமல் மறைந்து போன

குறும்புக் குட்டி வால்கள்.


வெய்யிலை வீணாக்காமல்

விளையாடுவோர் பலரிருக்க

வீடியோ கேம்ஸ் போதுமென்று

வீட்டுக்குள் ஒரு கூட்டம்.


பாட்டி வீடு அத்தை வீடு

பக்கத்தில் இருந்தாலும்

பழகின என் வீடே

படு சொர்க்கம் என்றாச்சு


நாள் முழுதும் நாடகம்

நடப்பதெல்லாம் பரவசம்..

நாளும் போனதிங்கே

நானும் குழந்தையாய்..

இவர்களில் ஒருவராய்..


#Happyholidays

No comments: