Monday, October 10, 2016

நவராத்திரி.. நினைவுகள்

நவராத்திரி..
சில நினைவுகள்..
சாயங்காலம்  நேரம்
சக தோழிகளோடு..
சரசரக்கும் பாவாடையும்.
சரமாய்த் தொடுத்த மல்லியும்..
சளைக்காமல் அலங்கரித்து..
சுண்டல் மாமி ..சுண்டல்னு..
சுத்து சுத்துனு..சுத்தி வந்து..
சரளி வரிசையை..
சிரத்தையாய் பாடி..
சுருக்கு பையிலே..
சில்லறை சேர்த்துண்டு..(தீபாவளிக்கு யானை வெடி வாங்க)
தினங்கள் ஓடும்..

சரஸ்வதி பூஜை..
பிடிச்ச பண்டிகை
பூஜையறையில்..
புகலும்.. புத்தகங்கள்

ஆஹா..படிப்பில்லை..
படி படினு தொல்லையில்லை..
நகரக் கூடாதே
இந்த நாள்னு வேண்டிப்போம்..

விஜயதசமி பூஜை..
விழிக்குமுன்னே..
விறுவிறுனு பண்ணும் அம்மா.
புத்தகங்கள் எடுத்து கொடுத்து..
போய் படி இப்போ என்பாள்..
விரியும் புத்தகம்..
சுருங்கும் முகம்..

குரு ஆசி வாங்க..
கூட்டமாய் போவோம்..
வீணை மாமி வீட்டில்..
கலை வாணி அவளுக்கு
வாழ்த்தொன்று வாசித்து..
வழிபாடும் முடித்துவிட்டு..
வீடு வந்து சேர்வோம்..

விடுமுறையும் முடியும்..
விடிஞ்சா பள்ளிக்கூடம்..
காலாண்டுத் தேர்வின்..
வண்டவாளம் தண்டவாளமேறும்..
கவலையுடன் கண்மூட
கணக்கு மார்க்கு ..
காலைக் கனவில் வர
கலங்கி விழித்து..
காத்து போன பலூனாய்
விடுமுறையின் சந்தோஷம்..
நடுக்கத்தில் முடியும்..

முப்பெரும் தேவியும்..
மீண்டும் வருவாள்..
அம்மா..சித்திகளின் வடிவில்..

No comments: