Thursday, August 3, 2017

அம்மா..

லிஸ்ட் படி எல்லாம் எடுத்துக்கணும்.அங்கே போய் திண்டாடக் கூடாது. கடை கண்ணிக்கு ஒரு குறைச்சலில்லை..ஆனா நேரம் எங்கே. போனவுடன் ஒரு காப்பி குடிக்கணும் . காப்பி பவுடர் ஒரு நாலு ஸ்பூன் எடுத்து வெச்சாச்சு. ஃபில்ட்டர் ஞாபகமா எடுத்துக்கணும். சக்கரை அங்கே எப்படியும் இருக்கும். வெளில கிளம்பறத்துக்கு முன்னாடி ஒரு ஸிம்ப்பிள் டிஃபன் சாப்பிடணும். வெண்பொங்கல் கூட ஒரு பருப்பு கொத்சு பண்ணிடலாம். ஒரு டம்ளர் அரிசி, பயத்தம்பருப்பு, இஞ்சி,பச்சை மிளகா, இரண்டு வெங்காயம்,தக்காளி கடுகு,ஜீரகம்,மிளகு ஒரு குட்டி பாட்டில்ல எண்ணெய், நெய் எல்லாம் மூட்டை கட்டியாச்சு. கிளம்பியாச்சு . விடியகாலம் ஊர் வந்து சேர்ந்தாச்சு. plan பண்ணினபடி ஒவ்வொரு வேலையும் சென்ஞு ரொம்ப நாளா பட்டினியா ் காத்திண்டு இருக்கும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணிட்டு காக்காவை கூப்பிட ஒண்ணு கூட திரும்பிப் பார்க்கலை. பழக்கமான காக்கா எல்லாம் இப்போ எங்கே போச்சு. என்னோட குரல் மறந்து போச்சா..
நான் கரைஞ்சது தான் மிச்சம் .  வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த சுந்தரம் ஐயாவைக் கூப்பிடு டிஃபனையும் கொடுத்து அவரோட ஆஸ்தான கப்பில் காப்பி கொடுத்த போது...'எம்புட்டு நாளாச்சும்மா..அம்மாவுக்கு அப்பறம் இப்படி கூப்பிட்டு சாப்பாடு போட ஆளே இல்லாம போச்சு.அம்மா இருக்க சொல்ல இந்த கப்பில கரீட்டா நான் அருகம்புல் பறிச்சு வெக்கவும் காப்பி குடுத்துடும். அதெல்லாம் ஒரு காலமா போய்டிச்சு. இப்போ கூட இங்கே நம்ம அம்மா நடமாடற மாதிரியே இருக்கும்மா..அவர் சொல்லவும் மளுக் கென்று என் கண்ணில் நீர்..
ஆமாம்..அம்மா இல்லா அம்மா வீட்டுக்கு வருவது ..்இப்போ பழகிப் போனாலும் ..அவள் சுற்றி சுற்றி வந்த வீடு, அவள் சுவாசம் நிறைந்த வீடு,அவள் குரல் எதிரொலித்து கொண்டிருந்த வீடு,அவள் தொடாமல் ஏங்கிக் கொண்டிருந்த பாத்திரங்கள்..வாசனை பரப்பிய கருவேப்பிலை மரம் ..
 கலைக்க மனமில்லாமல் சிந்தனைகளுடன் நான்.
வருடங்கள் ஓடினாலும்...நீ விட்டு சென்ற வெற்றிடம்..

No comments: