Wednesday, February 1, 2017

கண்ணாடி

புறக் கண்ணாடி முன் நின்ற வேளை
அகக் கண்ணாடி அழைப்பில்லாமல்
அங்கே  ஆஜர் ஆகியது..
புறக்கண்ணாடி: நரையும் வந்ததே.. நன்றாக இல்லையே..?
அகக்கண்ணாடி: மனக் கறைகள் மறைவதை அது எடுத்துச் சொல்லுதே..
புறக் கண்ணாடி: கருவளையம் கண்ணில்..??
அகக்கண்ணாடி: கண்மணி களுக்காக  நீ விழித்த கதை சொல்லுமே
புறக்கண்ணாடி: சுருக்கம் ஏனோ..?
அகக்கண்னாடி: சுருங்கி.. பின் விரிவதே வாழ்க்கை ..சுருக்கங்கள்..சுவடுகள்
புறக்கண்ணாடி: பல்லெல்லாம் போச்சே..
அகக்கண்ணாடி: பேசினால் இனிமே காற்று மட்டும் வரட்டும் . கடுஞ்சொல் வேண்டாமே..!
புறக்கண்ணாடி: பெருத்த தொப்பையும் தொந்தியும் ..இதுக்கென்ன பதில்..
அகக்கண்ணாடி: வறுத்தினாயே..இந்த சின்ன வயிற்றை..அபாயச்சங்கிது..அடங்கலனா..ஊதிடுவேன் உண்மையிலே..
புறமும் அகமும் பட்டிமன்றம் நடத்த..
புரியணும் ஓர் உண்மை.
வயது ஏற..
ஒளி வருமே..
கண்ணில் ..வருமொளி
கருத்தில் தெளிவிருந்தால்
முகத்திலே ..வருமொளி
முதிர்ச்சியின் ரேகைகளால்
செயல் சொல் எண்ணம்
செப்பிடனும் சிறப்பாக..
அக அழகு ஆட்சியிலமர
புற அழகு கூடும் என்றும்.

No comments: