Thursday, June 17, 2021

குட்டிக்கதை

 #நிம்மதி_நிம்மதி_உங்கள்_சாய்ஸ்

#குட்டிக்கதை


"முருகா..இன்னிப் பொழுது நல்லபடியா இருக்கணும்ப்பா..' ஸ்வாமியை வேண்டிக் கொண்டு ..கிச்சனுக்குள் நுழைந்தாள் சுகன்யா.


வெந்நீர் வைத்து காஃபிப் பொடியை ஃபில்ட்டரில் போட்டு..' குறை ஒன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா' YouTube ல் எம்.எஸ்.அம்மா உருக..

தேதியைக் கிழித்தாள். நாட்குறிப்பை படித்தாள்.

அதில் புன்னகை புரிந்தபடி இருந்த பெருமாளிடம்..' உன் பொறுப்பு எல்லாம் 'என்று வேலை ஆரம்பித்தாள்.


பாலைக் காய்ச்ச கவரை வெட்டினாள்.. 

பால் பொங்கியாச்சு..

ஃபில்டரிலிருந்து டிகாக்‌ஷன் எடுத்து விடலாம்னால்....

ஜோடி பிரிய மனமில்லாமல் ஃபில்டர் அடம் பிடிக்க.." கடவுளே..இன்னிக்கு என்ன இது..காலையிலேயே போராட்டம் ஆரம்பிச்சுடுத்தே..'..புலம்பல் ஆரம்பித்தாள்   சுகன்யா.


ஒரு வழியா..காஃபி குடிக்கும்போதே மணி ஆறரை ஆகி விட்டது.

"இட்லிக்கு ஊறப் போட்டதை எடுத்து அரைச்சுடலாம்.." கிரைண்டரை அலம்பி..உளுந்தைப் போட..டம்முனு ஒரு சத்தம் ..அபார்ட்மெண்ட் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம்..


பொசுக்குனு கரண்ட் கட்..


' போச்சு..இன்னிக்கு எந்த நேரத்தில கண் முழிச்சேனோ..இனிமே ஈ.பி க்காரன் வந்து சரி செய்ய்றதுக்குள்ள..'


ஏதோ ஏடாகூடமா இருக்கும்ப்போல இருக்கே இன்னிக்குனு..


மெதுவா பூனை மாதிரி கிச்சனுக்குள்  வந்தார் சங்கர்.

' இப்ப என்ன..கரெண்ட் வந்தா..வேலையை முடிக்கலாம்'..அவர் சொல்லச்சொல்ல..' "உங்களுக்கென்ன....' கோவத்தில் பொரிந்தாள்..சுகன்யா.


குளித்து முடித்து கோயிலுக்கு கிளம்பினாள்.


பூ வாங்கலாம்னு பைக்குள் தேடினால்..பர்ஸைக் காணும். ஏதோ ஞாபகத்தில வீட்லயே விட்டு விட்டு வந்து விட்டாள்.

" யம்மா..நீங்க..தினமும் தான் வரீங்களே..நாளைக்கு குடுங்க காசு..' பூக்காரி சொல்லவும்..தலையாட்டினாள்.

"ஏன் இப்படி இன்னிக்கு..?


வீட்டுக்கு வந்தவள்..

குக்கரை வைத்து சமைத்து முடித்து பரிமாற.

." அம்மா..are you OK? .பெண் கேட்டாள்..

"ஏன்..எனக்கு என்ன..' 

இல்ல..இன்னிக்கு குழம்பு,ரசம் ரெண்டுத்துலயும் உப்பே இல்லை..அதான் கேட்டேன்'..

பெண் சொல்லி முடிக்கவும்..


" இன்னிக்கு என் நேரமே சரியில்லை போ..'விரக்தியில் பேசினாள்.


" மா..கொஞ்சம் வைஃபை பாஸ்வேர்ட் சொல்லேன்'..மகன் சுரேஷ் கேட்க..

" இருடா..யோசிச்சு சொல்றேன்'..

அவள் சொன்னதும் தப்பு..

" அம்மா..இன்னிக்கு நீ வேணா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..டல்லா இருக்கற மாதிரி இருக்கியே ' பையன் 👦 சொல்ல..

மொபைல்  சிணுங்கியது..


' மேடம்..லேப்டாப்பில் நிறைய  மாத்தணும்..கொஞ்சம் எஸ்டிமேண்ட் விட ஜாஸ்தியாகும்..பரவாயில்லையா?..

அவன் சொன்ன தொகை..ரொம்பவே அதிகமா இருந்தது.

 "என்னங்க இது ...? எல்லாமே இப்படியா? அவள் விசனத்துடன் சொல்ல..

 

 " இதெல்லாம் சகஜம் தானேம்மா..ஒரு நாள் போல ஒரு நாள் இருக்குமா என்ன?'

 

 "அதில்லப்பா..காலம்பற காலண்டர்ல தேதி கிழிக்கும் போது ..என் ராசிக்கு "சோதனை"னு போட்டு இருந்தது..

 

அதுதான்..இன்னிக்கு இப்படி ஒண்ணு பின்னாடி ஒண்ணு பிரச்சனை'..


அவள் சொல்லவும்..

" ஒரே ஒரு ராசி பலன் வார்த்தை..ஒரு நாளோட நிம்மதியே கெடுத்து விட்டதே'..


முதல் வேலையாக..

கிச்சனிலிருந்த காலண்டரை இடம் மாற்றினார்.


நாளையும் பிரச்சனைகள் வேறு விதமாக வரும்தான்.. ஆனால்..இப்படி தேவையில்லாமல் நிம்மதி ஏன் கெடுத்துக் கொள்ளணும்..?

No comments: