Thursday, June 24, 2021

காட்டு மல்லி...

 காட்டு மல்லி...

கடுகளவும் கசப்பில்லை..

கடவுள் தந்த வாழ்வுக்கு..


ஆஹா..மல்லி..

அருகே வருவார்..

ஐயே..காட்டுமல்லி..

அகன்று போவார்..


மணமணக்கும் மல்லியாய்..

மண்ணில் பிறக்கலையே..

மருகியதே இல்லை..

குண்டும்..ஜாதியும்.

கூறும் குறைகேட்டு..


மொட்டிலே கிள்ளி ..

மருந்தும் அடித்துவிட்டு..

மூட்டையாய்க் கட்டி..

மூச்சு திணற..

மோட்டரில் ஏற்றி..

மார்க்கெட் டுக்குப் போய்

கூடையிலே கொட்டி

கூறு போட்டு

கூவிக் கூவி வித்து..

பேரம் பேசி..

அய்யோ சாமி..


இன்று இதன் வாசம்..

கல்யாணத்திலா..

கருமாதியிலா..

குரங்கு கைப் பூமாலையாய்..

குமுறும் வாழ்வு..


காட்டு மல்லியே..

கடவுளால் இரட்சிக்கப்பட்டவன்..

நீ... என்றது ..

கனத்த மன(ண)த்துடன்..

No comments: