Friday, October 6, 2023

Madhyamar- சிறுகதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை

கொடுப்பினை


"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.

இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"ச்கலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.

டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.

அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

"ஏய் கிரிஜா் ..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.


தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..

யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.

இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.

அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..


மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம் ...பார்த்து போங்க ரெண்டு பேரும்..அன்புக் குரல்கள்.


அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..

"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.


"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

No comments: