Friday, October 6, 2023

Madhyamar- எளிய மனிதர்கள்

 #எளியமனிதர்கள்


"உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லே யா..அரே ஹோயானு ரஜினி பாட்டு பாடிண்டே பதிவெல்லாம் படிக்கலாம்..ஹே யா..அரே ஹோயா..


சிலிண்டர் சுப்பையா..


(rhyming க்காக இல்லை இந்தப் பெயர்)


'கவலையேப் படாதீங்க ம்மா..காலைல 8.10 க்கு நீ வூடு பூட்டறதுக்கு முன்னால நான் முதோ லோட்ல உங்களுக்கு கொண்டாந்து போட்டு போயிர்ரேன்..

சொன்னபடி .ஏஜன்சியில் லோட் வந்ததும் ஒரு மெரி மிரிச்சு எங்கத் தெருவில வேலைக்கு போகும் அம்மாக்களுக்கு சிிலிண்டர் வந்து இறக்கிட்டுப் போகும் சுப்பையா அண்ணா.

5 ரூவா கொடுத்தாலே ஏதோ லட்சம் கிடைத்த திருப்தி..


சிலிண்டரை செக் பண்ணிட்டு 'அம்மா..அடுப்பு துடைக்க ஞாயிற்றுக்கிழமை வந்துடறேன்.

சுத்தமா கெரசின் போட்டு ஓட்டையெல்லாம் அடைப்பை சரி செஞ்சு பளபளக்க வைப்பார்.


பாவம் ..ஞாயிறு கிடைக்கும் அரை நாள் லீவிலும் இதேப் போல எல்லார் விட்டிலும் வேலை. 

ஒரு நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோயேன் ப்பானு அப்பா சொல்லும்போது..' இன்னா சார் பண்றது ..ரெண்டு பிள்ளைகளை படிக்க வெக்கணுமே..என்னை மாதிரி அவங்களும் ஆகிடக் கூடாது..அதான் சார்.


மிகக் குறைந்த ஆட்களுடன் இயங்கிய அந்த ஏஜென்சியில் ஒரு நாள் எத்தனை ட்ரிப் அடிப்பார் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


சில வருடங்களுக்கு பின்..

டெல்லிலேர்ந்து வந்து சூறாவளிச் சுற்றுப் பயணத்தில்  இருந்தேன். திருச்சியில் இருந்து ட்ரெயினில் வர..அப்பா ஃபோன் செய்தார். ஸ்டேஷனுக்கு சுப்பையா வருவார். நீ அவரோட வீட்டுக்கு வந்துடுனு சொல்லி டொக்குனு ் லைன் கட்.


தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கியதும் என் கோச் வாசலில் வரவேற்ற சுப்பையா அண்ணா..'அப்பாவுக்கு பாவம் அவசர வேலை..அதான் என்னை அனுப்பிச்சாரு.. நடந்துகொண்டே பேசியவர்..பளபளக்கும் ஆட்டோவை காண்பித்து ..

' குந்தும்மா..நம்ம வண்டிதான்..மூணு சக்கர வண்டி மெரிச்சு முட்டிக்காலெல்லாம் வீங்க ஆரம்பிச்சது..கடனை உடனை வாங்கி இந்த ஆட்டோ வாங்கி ஓட்டறேன். வருமானம் பரவாயில்ல..என் பையனுக்கு மெரிட்ல சீட் கிடைச்சு காரைக்குடில படிக்கிறான்மா..

வாயைப் பிளந்தபடி அவர் கதையை கேட்டு வந்தேன்.


விடிகாலம் வண்டி எடுத்தேன்னா..வூடு போய் சேரும்போது நடுநிசி ஆகிடுதும்மா என்றார். அண்ணா உங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றேன்.


அப்பா அம்மாவுக்கு ஆஸ்பிட்டல் போறது, கடைத்தெரு ,பாங்க் எல்லா இடமும் கூட்டிக் கொண்டு போக ஒரு நம்பிக்கையான ஆள். எங்க காலனிக்கேனு சொல்லலாம்.


அடுத்த வருடம் போனபோது..' சின்னதா ஒரு கிரவுண்ட் வாங்கி ஒரு ரூம் கட்டிட்டேன்மா' என்றார். அதுகொஞ்சம் கடன் இருக்கு இப்போ..அடுத்த வருசம் புள்ளைக்கு காம்பஸ்ல வேலை கிடைச்சா கொஞ்சம் காசு சேர்த்து பொண்ணை ஒரு நல்ல எடத்தில புடிச்சி கொடுக்கணும்..


அதெல்லாம் உங்களுக்கு அருமையா கிடைக்கும்ண்ணா என்றேன்.


எப்போதும்போல உலக விஷயம் ஒலிபரப்பும் அம்மா ஒரு நாள் சொன்னாள்.' 'சொல்ல மறந்துட்டேனே்..நம்ம சுப்பையா பையனுக்கு நல்ல வேலை கிடைச்சு இப்போ US போறானாம்.பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான்.


அவன் கனவும் உழைப்பும் வீண் போகலை..

ஆனா..என்ன ..இன்னும் முடிஞ்ச வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கறேங்கறான்.


அம்மா இறந்தபோது கூடமாட உதவிக்கு வந்த சுப்பையா அண்ணா சொன்னார்..

' வாழ்க்கையில் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்லை கண்ணு..எனக்கு தெரிஞ்சதெல்லாம் உண்மையா இருக்கணும்..ஓடாத் தேஞ்சாலும் உழைக்கணும்.

பக்கத்தில் நின்றிருந்த அவர் மனைவி கண்ணில் ஒரு பெருமிதம்.

No comments: