Thursday, October 5, 2023

கனியுமா காலம்?

 #PPAP-1

#அந்தாதி

#கவிதை_1


கனியுமா காலம்?



கருவறையின் இருள் வாசத்திலும்

கைகால் வீசி மகிழ்ந்தேனே..


மகிழ்ச்சியில் மிதந்தது சுற்றமுமே..

குலவிளக்காய் நான் பிறந்ததுமே..


பிறந்த வீட்டில் எப்போதுமே

பொத்தி வைத்து கொண்டாட்டமே.


கொண்டாட்ட மிப்போ  திண்டாட்டமாச்சு

வெட்டினாரே பட்டென என்சிறகை.


சிறகெல்லாம் அழகுக்கு மட்டுமே

ஆட்டுவித்தாரே ஆளுக் கொருவர்.


ஒருவன் வருவான் கைபிடிக்க

உனக்குத் தருவான் சுதந்திரமே


சுதந்திர காற்றை சுவாசிக்க

சுற்றி அலைந்தது என்மனமே


மனதுக் கினியான் வருகைக்கே

மனமும் மிதக்குது கனவினிலே


கனவில் உலவும் அரசிளங்குமரன்

அவிழ்ப்பானா என் கட்டை?


கட்டுக்கட்டாய் நோட்டு கேட்டு

நோகடிக்கா குண

மிருக்கணுமே?


இருப்பது என்னிடம் அன்பொன்றே..

அள்ளித் தருவேன் ராசனுக்கு..


ராச வாழ்க்கை

தேடலிலில்லை..

ரசமிகு வாழ்வே போதுமெனக்கு..


எனக்குத் துணையாய் பறந்திடவே..

வண்ணச்சிறகோடு வரும் நாளெப்போ?


நாட்கள் ஓடுது நொடியாக

நானும் எடுத்தேன் புகைப்படமே..


புகைப்படம் சூசகமாய்க் காட்டிடுமே

அகப்படம் என்னுள்ளே எதுவென்று...!!!

No comments: