Thursday, October 5, 2023

Madhyamar-நானே_நான்_தான்

 #VPKP1

#கதை1

#நானே_நான்_தான் 19-02-229


என் பெயர் நிகிலா..


டாக்டர் நிகிலா.

இன்னிக்கு இந்த புது வரவைக் கையில் ஏந்தியபோது..

' என் குறை தீர்க்க வந்த குட்டிப் பொண்ணேனு"..கண்ணீர் மல்க நிற்கிறேன்.


நான் குட்டியூண்டு பொண்ணா இருக்கும்போதே...

' நீ படிச்சு ..பெரியவளாகி என்ன ஆகப் போறனு ' யார் கேட்டாலும்..

டக்குனு ' டாக்டர்" ஆகப்போறேன்னு தான் சொல்லுவேன்.


இன்ஜினியரும் ,கணக்கரும் மட்டுமே இருக்கும் என் 

குடும்பத்தில் ..டாக்டர் ஆசை உனக்கு எங்கேர்ந்துடி வந்ததுனு அம்மா சத்தம் போடுவாங்க.


' டாக்டரா ..நீயா..ஊசியைப் பார்த்தாலே பயந்து ஓடற ..பயந்தாங்கொள்ளி நீ..டாக்டர் ஆகப் போறாளாம்ல"..கிண்டல் செய்யும் அண்ணனும் தங்கையும்


" அதெல்லாம் சீட்டு கிடைக்கறது குதிரைக் கொம்பு . எம்புட்டு படிக்கணும் தெரியுமா.?..அதுவும் படிச்சிக்கிட்டே இருக்கணும்.அப்போதான் நல்ல பெரிய டாக்டராக முடியும் ..தெரியுமில்ல"..நம்ம கிட்ட அம்புட்டு வசதி எல்லாம் இருக்கா என்ன?'.

துளிர் விடும்போதே..திசை திருப்ப அல்லது வெட்டியே விட்டுடணும்னு துடித்த பெற்றோர்.


பத்தாம் வகுப்பில் நான் தான் அந்த மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்கினேன்.

நீயூஸ் பேப்பருக்கு பேட்டி எல்லாம் கொடுத்தேன்.

டாக்டராகணும்னு ஆசை ..இதையே திருப்பித் திருப்பிச் சொன்னேன்.


ஃபோட்டோவுக்கு சிரித்தாலும்..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் மேலே கொஞ்சம் கோவம் தான்.


இருக்காதா பின்ன?

எங்க அண்ணன் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுத்து..படிச்சு ..இன்னிக்கு பெரிய ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் கை நிறைய சம்பாதிக்கிறான். குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறான்.

' இந்த டாக்டர் படிப்பெல்லாம் நமக்கு சரிப்படாதும்மா..அதுக்கெல்லாம் வழி வழியா குடும்பத்தில் டாக்டர்கள் இருக்கணும்.சொந்த க்ளினிக் இருக்கணும்..நீங்க நினைக்கற மாதிரி இந்த தொழிலில் காலூன்றது சுலபமில்லை'..அப்பா எப்படியாவது என்னை அவர் வழிக்கு இழுக்கப் பார்த்தார்.


அசையலையே நான்.


..தெய்வம் மாதிரி எங்க பள்ளி தலைமை ஆசிரியர் எனக்கு உதவி செய்ய முன் வந்தாங்க..

அவ ஆசைப்பட்டதைப் படிக்கட்டும். நான் முடிஞ்ச அளவு ஸ்காலர்ஷிப் வாங்கித் தரேன்." வாக்கு கொடுத்து ..அதையும் நிறைவேத்தினாங்க.

எங்க அண்ணன் பாவம்..' நீ படி நிகிலா..நான் இருக்கேன் உனக்கு'னு தோள் கொடுத்தான்.


12 ம் வகுப்பு படிக்கும் போதே..நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்தேன் .

கண்ணை மூடினாலே..

ஸ்டெதஸ்கோப்புடன் நான் ஹாஸ்பிட்டலை வளைய வர மாதிரியே இருக்கும்.


அவ்வளவு வெறி இந்தப் படிப்பு மேலே..


அப்பா அம்மாவுக்கும் புரிஞ்சது..நான் சும்மா எதுவும் சொல்லலைனு..


என் உழைப்பு, சுத்தி இருக்கறவங்க கொடுத்த ஊக்கம்..


நல்ல அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்க..என் கனவுப் பயணம் ஆரம்பம்.


எம்.பி.பி.எஸ் என்ற நாலெழுத்து வார்த்தை என் பேருக்குப் பின்னாடி வந்த அன்று..

அப்பாடி..சந்தோஷத்தின் உச்சிக்கே போனேன்.


பகுதி நேர வேலை...மீண்டும் முதுகலை படிப்புக்கு தயார் செய்தேன்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் நான்..இந்த முறை இரண்டாவது நுழைவுத் தேர்வில் தான் வெற்றி பெற்றேன்.


' மகப்பேறு மருத்துவப்" படிப்புக்குள் நுழைந்தேன். படித்தேன் ..முடித்தேன்..

நிறைய பெரிய மருத்துவமனைகளில் எத்தனை எத்தனையோ கேஸ்களைக் கையாண்டேன். ஒவ்வொரு நாளும் பாடம் கற்றேன்.


எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும்   ரொம்ப பெருமை.

"பாரு..எப்படி சாதிச்சுட்டா பாரு"


டாக்டர் பிரதீப்பை மணம் முடித்தேன்.


சொந்தக் கிளினிக் வைத்தோம்.


அங்கே தான் ஆரம்பித்தது..எனக்கு கஷ்டகாலம்.


என்னிடம் சிகிச்சைப் பெற்று..

என் வழி நடத்துதலில் குழந்தை பெற்றுக் கொள்ள வந்தனர் பல பெண்கள்.


கிளினிக் திறந்ததும் வந்த முதல் பிரசவ கேஸ்.


ஆசையாய் இருந்தேன்..

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்த போது..கடைசி நிமிட சிக்கலில் ..ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்து..தாயும் சேயையும் காப்பாற்றினேன் என்ற சந்தோஷம் ஒரு நொடியில் கரைந்தது..


' என்ன டாக்டர்..இப்படி சிஸேரியன் பண்ணிட்டீங்க. நார்மல் டெலிவரி ஆகும்னு சொன்னீங்களே. "


என் பேஷண்ட்டின் பெற்றோரின் அதிருப்தி குரல்.


" சிசேரியன் செஞ்சா ..காசு எக்கச்சக்கமா வரும்ல"..கூட இருந்தவர் சொன்னபோது உடைந்து அழுதேன்.


எப்படி சொல்வது..உயிர்களைக் காப்பாற்ற உள்ளே நடந்த போராட்டத்தை....


என் நேரம் ..அடுத்து வந்த சில  பிரசவங்களும்  சிஸேரியனில் முடிய..

" அந்த ஆஸ்பத்திரி போனால் கண்டிப்பா ஆபரேஷன் தான் செஞ்சுடுவாங்க அந்தம்மானு"..

என் பெயர் எள்ளி நகையாடப் பட்டது.


என் டென்ஷன் பல மடங்காகியது.

என்னோட எண்ணம் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது அல்ல..ஆனால்..ஒரு டாக்டராக ..நான் சமயத்தில் எடுக்கும் முடிவு தான் ..அவர்களுக்கு நல்லது என்று எப்படி புரிய வைப்பேன் .


என் தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது..


இப்படி யோசனையில் இருந்த ஒரு காலை

' டாக்டர்..உள்ளே வரலாமா?"

பரிச்சயமான குரல்..


எல்லா டெஸ்ட்டும் அவள் தாயாகப் போவதை ஊர்தி செய்ய..

என் மனதில் இருந்த கவலை..இதுவும் சிஸேரியன் ஆகிவிட்டால்..


தொண்டையில் நின்ற வார்த்தைகளைச் சேகரித்தேன்.


" இங்க பாரு...என் ஃப்ரண்ட் இப்போ லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தோடு பக்கத்தில் தான் கிளினிக் ஆரம்பிச்சிருக்காள். நான் எழுதித் தரேன் ..நீ அங்கே போய் உன் ட்ரீட்மெண்ட் தொடர்ந்து கொள்"..

நான் என் பேச்சை முடிக்குமுன்..

' எனக்கு அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் எப்போ'?..

கேட்டபடி வெளியேறி விட்டாள்.


அவளுக்கு சில தீவிர  உடல் உபாதைகள் இருந்தது.

என்னால சரி பண்ணிட முடியும். ஆனால்.பாழாய்ப்போன இந்த பயம்..

பழைய நிகிலா எங்கே?..முகம் பார்க்கும் கண்ணாடி கூட என்னைப் பார்த்து கிண்டலடித்தது..

பிரதீப்புக்கும் என்னோட இந்த்ச் மனநிலை கோபத்தைக் கொடுத்தது.


 மாதங்கள் ஓடின.

 ஒரு டாக்டர் நீ...உன்னைதேடி வருபவர்களை நல்ல முறையில் வழிகாட்டுவேன் என்று எடுத்த சபதம் ..மீண்டும் மீண்டும் என்னைத் துளைக்க..

 தூக்கி எறியத் துணிந்தேன் என் தேவையில்லா பயத்தை.


சரியான ஆலோசனைகள் கொடுத்தேன்.


 அவளுக்கு எப்படியும் ஆபரேஷன் தான் செய்ய வேண்டி இருக்கும் என சக மருத்துவர்கள்  அபிப்ப்ராயப் பட்டனர்.


தலை தூக்கிய பயத்தை 

தட்டி விரட்டினேன்.

 

 ஊர் பேசினால் பேசட்டும்.

 எனக்குத் தெரியும் ..ஒரு உயிரல்ல..உயிர்களின் உன்னதம்.

அந்த நேரத்தில் எது சரியோ ..அதைச் செய்வேன் என்று உறுதியெடுத்தேன்.


என் பழைய உற்சாகத்தைப் பார்த்து..பிரதீப்புக்கும் ஆச்சரியம்.


இதோ..இன்று காலை.

கிளினிக் கிளம்பிய போது..மொபைல் சிணுங்கியது.


" டாக்டர்..சீக்கிரம் வாங்க'..


ஓடினேன்.


எல்லாம் ரெடியாக காத்திருக்க..


அவன் மேல் பாரத்தைப் போட்டு என் கடமையைத் துவக்கினேன்.


அரை மணிப் போராட்டத்துக்குப் பின் ..


ஆபரேஷனுக்கு தேவையே இல்லாமல்..

தேவதை வெளியே வந்தாள்..

நார்மல் டெலிவரியில் ...


அழுகைச் சத்தம்..ஆஸ்பத்திரியை கலக்க..

உன்னைக் கையில் தாங்கிய நேரம்...

" நார்மலி டெலிவரி..நார்மல் டெலிவரி'..


என் கிளினிக் கொண்டாடியது.


இனியெலாம் சுகமே..சுகப் பிரசவமே'..


நர்ஸ் ஒருத்தி பாடிக் கொண்டாடினாள்.


ஆனால்..நானோ..


என்ன ஆனாலும்.. ஒரு மருத்துவராக 

என்னைத் தேடி வருபவருக்கு எது சரியோ . அதை மட்டுமே செய்வேன் என்ற திண்ணத்துடன்..


டாக்டர் நிகிலாவாகிய நான்.


PC: Govindaraj Lakshminarayanan sir

No comments: